2 கிலோ கோதுமை திருடிய நபரை 45 ஆண்டுகள் பிறகு கைது செய்த போலீஸ்
ரூ 100 மதிப்புள்ள 2 கிலோ கோதுமையை திருடிய நபரை 45 ஆண்டுகள் கழித்து போலீஸ் கைது செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் பால்காவாடா பகுதியில் பால்காட் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமாத்தில் அமைந்துள்ள வயல் பகுதிகளில் கோதுமை பயிரிடுவது வழக்கம். குறிப்பிட்ட ஒரு வயலில் ரூ 100 மதிப்புள்ள கோதுமை திருடு போனது.
1980ம் ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியது. தனது நிலத்தில் இருந்து கோதுமை திருடு போனது தொடர்பாக விவசாயி காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கோதுமையை திருடியதாக சலீம் மற்றும் ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டார். அந்த பகுதியில் சிறிய கடை ஒன்றை அவர் நடத்தி வருகிறார். அவருக்கு தற்போது 65 வயது ஆகிறது.
மாநில அளவிலான நீண்ட கால வழக்குகளில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணிகளை மத்தியப் பிரதேச காவல்துறை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. இதில் சலீமின் முன்னாள் கூட்டாளி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சலீமை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

