புதுச்சேரியில் டிச 9-ம் தேதி பொதுக்கூட்டம் : தவெக சார்பில் காவல்துறையிடம் மனு
புதுச்சேரியில் டிசம்பர் 9-ம் தேதி தவெக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கோரி காவல்துறையிடம் அக்கட்சி மாநில நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
விஜய் நாளை (டிச. 5) புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவதற்கு கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பே அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை இந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை நேரில் சந்தித்து சாலைவலத்துக்கு அனுமதி அளிக்க தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் கோரிக்கை வைத்தார்.
முதல்வருடனான சந்திப்பின் போது, போக்குவரத்து நெரிசல் இல்லாத, சாலை அகலகமாக உள்ள சிவாஜி சிலை முதல் கொக்கு பாா்க் வரை 1.5. கி.மீ. தொலைவுக்கு மட்டும் ரோடு ஷோ நடத்துவதற்கு ஆனந்த் அனுமதி கோரியதாக தெரிகிறது.
இதற்கும் புதுச்சேரி காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்த நிலையில், பொதுக்கூட்டம் வேண்டுமென்றால் நடத்திக் கொள்ளலாம் அம்மாநில டிஐஜி தெரிவித்து இருந்தார். அனுமதி கிடைக்காத காரணத்தால் விஜய் புதுச்சேரி பயணம் தள்ளி வைக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், டிசம்பர் 9-ம் தேதி புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் தவெக பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரி காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளனர்.
What's Your Reaction?

