ரூ.4 கோடி பணம் பறிமுதல்.. பாஜக நிர்வாகி வீட்டில் சிபிசிஐடி அதிரடி சோதனை.. சிக்கியது என்ன?

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக பிரமுகர் கோவர்தனின் வீடு மற்றும் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது ஹோட்டலில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

May 7, 2024 - 17:51
ரூ.4 கோடி பணம் பறிமுதல்.. பாஜக நிர்வாகி வீட்டில் சிபிசிஐடி அதிரடி சோதனை.. சிக்கியது என்ன?

கடந்த மாதம் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற ரயிலில் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பணத்தை சிலர் எடுத்துச்சென்றனர். சோதனையின்போது அந்த பணம் சிக்கியது. இது வாக்காளர்களுக்கு அளிக்க எடுத்துச்செல்லப்பட்ட பணமா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு காவல்துறை சார்பில் இந்த விசாரணை நடந்து வந்தது. பிடிபட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று புகார் எழுந்த நிலையில் ,அதனை அவர் ஊடகங்கள் முன்னிலையில் அவர் மறுத்துவிட்டார். பணத்தை எடுத்துச்சென்றவர்கள் நயினார் நாகேந்திரனின் ஓட்டுநர்  மற்றும் உதவியாளர் என்று தகவல் வெளியானது.  

இந்த நிலையில் குறிப்பிட்ட இந்த வழக்கு தமிழ்நாடு  காவல்துறையிடம் இருந்து அண்மையில் சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை டிஜிபி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவினை அடுத்து ஆவணங்களை தமிழ்நாடு காவல்துறையினர் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த மாதம் 22 ஆம் தேதி நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளிக்கப்பட்டது. அவர்  மே 2 ஆம் தேதி ஆஜராவதாக  அவகாசம் கோரியிருந்தார். 

இந்த நிலையில் வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டார்.  அவர் பணிகளை தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் வழக்கை விசாரிக்க இரண்டு தனிப்படைகளை சிபிசிஐடி போலீசார் அமைத்துள்ளனர். இந்த இரண்டு தனிப்படைகளும் துவக்கத்தில் இருந்து வழக்கை விசாரிக்க உள்ளது. பணத்தை பிடித்த பறக்கும் படை அதிகாரிகள், பணத்தை எடுத்துச்சென்றதாக பிடிபட்டவர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பினரிடமும்  விசாரணை நடத்த இருக்கின்றது. 

இதனிடையே 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 3  பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், பாஜக பிரமுகர் கோவர்தனின் வீடு மற்றும் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது ஹோட்டலில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். 

நீலாங்கரையில் உள்ள பாஜக பிரமுகர் கோவர்தனின் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. வீட்டில் இருந்த பாஜக பிரமுகர் கோவர்தன் மற்றும் அவரது மகனிடமும் சி பி சி டி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். சோதனையில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow