தவெக கூட்டணிக்கு ஆதரவாளர்கள் கிரீன் சிக்னல் : எடப்பாடியை தேற்கடிக்க ஓபிஎஸ் சபதம்
சட்டமன்ற தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க ஆதரவாளர்கள் கிரீன் சிக்னல் கொடுத்த நிலையில், எடப்பாடிக்கு தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவோம் என பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
சென்னை வேப்பேரியில் ஆதரவாளர்களுடன் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். இதில் ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: தொண்டர்களுக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கியது அ.தி.மு.க. ஆனால், அது இப்போது அவ்வாறு இல்லை. தை பிறந்தால் வழி பிறக்கும்.
எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க.வில் ஒன்றிணைவோம் என்ற வைத்திலிங்கம் கருத்தை வழிமொழிகிறேன். எடப்பாடி பழனிசாமி உள்ள அணியில் இருப்பதே வெட்கக்கேடு. இன்றைக்கு கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். கடந்த மக்களவை தேர்தலில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை அ.தி.மு.க. இழந்திருக்கிறது.
7 மக்களவை தொகுதிகள் என்றால் 42 சட்டமன்ற தொகுதிகள் வருகிறது. பொதுச்செயலாளராக பொறுப்பேற்று சந்தித்த 11 தேர்தல்களில் படுதோல்வி அடைந்து அ.தி.மு.க.வை பாதாளத்திற்குத் தள்ளிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அவரின் பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளது.
தனது ஆதரவாளர்களை கூட்டி வைத்துக் கொண்டு போலியான பொதுக்குழுவை உருவாக்கி, ஒற்றை தலைமைதான் வேண்டும், பழனிசாமி சிறப்பாக கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார், பழனிசாமி சிறப்பாக முதல்வராக இருக்கிறார்.
அவர் வந்தால் அனைத்து தேர்தல்களிலும் நாம் மாபெரும் வெற்றி அடைவோம் என்று சொல்லி தான், ஒரு மிகப்பெரிய மாயையை உருவாக்கினார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என பேசினார்.
மேடைக்கு 5 மணிக்கு வந்த பன்னீர்செல்வம் மிகுந்த டென்ஷன் உடன் காணப்பட்டார். இதற்கு காரணம், நேற்று சென்னை வந்திருந்த பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்த நிலையில், அதனை கேன்சல் செய்துவிட்டார்.
இதனால் கூட்டம் தொடங்கிய உடன் அறைக்கு சென்ற பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் ஒவ்வொரு வரை தனிதனியே அழைத்து துண்டு சீட்டு கொடுத்துள்ளார். அதில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
Option a தவெக - Option b திமுக
என இரு வாய்ப்புகளை கொடுத்து மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்கவே அதிகளவில் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு பன்னீர்செல்வம் கிரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறாராம்.
What's Your Reaction?

