போலீசை வேலை செய்யவிடவில்லை?.. சவுக்கு சங்கரின் நண்பர், டிரைவர் மீதும் பாய்ந்த வழக்குகள் !

400 கிராம் கஞ்சாவை அவர்களின் காரில் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

May 5, 2024 - 14:18
போலீசை வேலை செய்யவிடவில்லை?.. சவுக்கு சங்கரின் நண்பர்,  டிரைவர் மீதும் பாய்ந்த வழக்குகள் !

தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த வாகன ஓட்டுனர் மற்றும் அவருடைய நண்பர் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேனி போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தேனி பழனிசெட்டிபட்டி தனியார் தங்கும் விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.  தொடர்ந்து அவர் கோவைக்கு அழைத்துச் செல்லப்படும் போது வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அவர் கைது செய்யபட்டபோது அவருடன் இருந்த ஓட்டுநர் ராம் பிரபு மற்றும் அவருடைய நண்பர் ராஜரத்தினம் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அவர்கள் போலீசாரை தகாத வார்த்தையில் பேசியும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன், 400 கிராம் கஞ்சாவை அவர்களின் காரில் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

தொடர்ந்து இருவரையும் தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow