5 நாட்களுக்கு வெப்ப அலை.. ஈரோட்டில் வறுத்தெடுக்கும் வெயில்.. 9 ஊர்களில் சதமடித்த வெப்பநிலை.. உஷார் மக்களே!

இன்று முதல் 30.04.2024 வரை அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Apr 26, 2024 - 14:28
5 நாட்களுக்கு வெப்ப அலை.. ஈரோட்டில் வறுத்தெடுக்கும் வெயில்.. 9 ஊர்களில் சதமடித்த வெப்பநிலை.. உஷார் மக்களே!


தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. சாலையில் முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லேட்  போட்டு வெயிலின் தாக்கத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். 

வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களும், முதல்வரும் அறிவுறுத்தி வருகின்றனர். வழிகாட்டு நெறிமுறைகளையும் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில் இன்னும் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை. அதிகபட்ச வெப்பநிலை. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில்  பெரிய மாற்றம் எதுவும் இல்லை. 

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது.   கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை  பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை 9  இடங்களில்   40.0° செ- க்கு மேல்  பதிவாகியுள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை  ஈரோட்டில் 42.2° செல்சியஸ்,  திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், சேலத்தில் 41.7° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ், தர்மபுரியில்  40.7° செல்சியஸ்,  நாமக்கல்லில் 40.5° செல்சியஸ், திருச்சியில் 40.2° செல்சியஸ், திருத்தணி மற்றும் வேலூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ்    பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 38° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 22° –30°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது.  சென்னை மீனம்பாக்கத்தில் 36.8° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.2° செல்சியஸ்   பதிவாகியுள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 26.04.2024 முதல் 29.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 30.04.2024 மற்றும் 01.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை  மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

26.04.2024 முதல் 30.04.2024 வரை தமிழக உள்  மாவட்டங்களில்  அடுத்த ஐந்து  தினங்களில்  அதிகபட்ச   வெப்பநிலை    2°  செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°–42° செல்சியஸ், இதர  தமிழக மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–39° செல்சியஸ் இருக்கக்கூடும்.

26.04.2024 முதல் 30.04.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும்  இருக்கக்கூடும். இன்று முதல் 30.04.2024 வரை: அடுத்த ஐந்து  தினங்களில் வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow