தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு......வானிலை ஆய்வு மையம் தகவல்....!

தமிழகத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Aug 3, 2026 - 17:33
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு......வானிலை ஆய்வு மையம் தகவல்....!
Tamil Nadu Weather

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தென் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுவதுடன், வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 4) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இதர சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, மதுரை மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 6-ஆம் தேதி தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 7-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் என்று அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் குண்டாறு அணையில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 7 செ.மீ., ஊத்தில் 6 செ.மீ., தேனி மாவட்டம் பெரியாறு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரத்தில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும், திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், திருவள்ளூர் மாவட்டம் ஜெயா பொறியியல் கல்லூரி, கோவை மாவட்டம் உபாசி, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், தேனி மாவட்டம் தேக்கடி மற்றும் கடலூர் மாவட்டம் மீ-மாத்தூர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow