டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரி செல்லும் விஜய் - ரோடு ஷோ நடத்த தவெக நிர்வாகிகள் கடிதம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு ரோடு ஷோ நடத்துவதற்காக அம்மாநில நிர்வாகிகள் அனுமதி கோரி காவல்துறையிடம் கடிதம் அளித்துள்ளனர்.
தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது மாநில மாநாடு சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாடுகளை நடத்தி தொண்டர்கள் மத்தியில் பேசும் விஜய் நேரடியாக மக்களை எப்போது சந்திப்பார், கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டு ஆகியும் மக்களை சந்திக்க தயங்குவது ஏன் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் மக்கள் சந்திப்பு பயணத்தை அவர் தொடங்கி நடத்தி வந்தார்.
கரூர் சுற்றுப்பயணத்தின் போது 41 பேர் மரணம் அடைந்தனர். இதனால் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் தள்ளி வைத்து இருந்தார். இந்த நிலையில் சேலத்தில் மீண்டும் சுற்றுப்பயணத்தை டிசம்பர் 4-ம் தேதி தொடங்க அம்மாவட்ட காவல்துறையிடம் தவெக நிர்வாகிகள் அனுமதி கடிதம் அளித்தனர். ஆனால் காவல்துறை இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில், புதுச்சேரியில் டிசம்பர் 5-ம் தேதி சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அம்மாநில நிர்வாகிகள் புதுச்சேரி அரசிடம் அனுமதி கடிதம் அளித்துள்ளனர். த.வெ.க. மாநில நிர்வாகிகள் புதியவன், நிரேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிரசாரம் நடத்த அனுமதி கோரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் மனு அளித்தனர்.
What's Your Reaction?

