கல்விக்கடன் ரத்து, முதியோர் பென்சன் 2 ஆயிரம், ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அதிமுக 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதி
சட்டமன்ற தேர்தலையொட்டி 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலையொட்டி இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.
முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியங்கள் ரூ.2,000-மாக உயர்வு: சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி : மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும். . வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் : வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில், வீரர்கள் காளையை பிடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். அதேபோல், படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
மருத்துவ அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு, அரசின் சார்பில் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற ஆன்லைன் முறை ரத்து செய்யப்படும். ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையே (Manual) மீண்டும் பின்பற்றப்படும்.
சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி: அ) இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
ஆ) மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். என அறிவித்தார்.
கடந்த ஜன. 17 ஆம் தேதி முதல்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அவை, மகளிர் உதவித் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும், ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லை, கிராமப்புறங்களில் வீடுகள் இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டம் சார்பில் நிலம், நகர்ப்புறங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள், 150 நாள்கள் வேலைத்திட்டம், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாக்குறுதிகள் எடப்பாடி அறிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

