”ஆணவம் அழிவுக்கு வழி...” கைதான EX அமைச்சர்.. X-ல் காட்டமான திமுக தலைவர்கள்..!
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கைதை கண்டித்து தவெக அரசை திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று(ஜூலை 01) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் கைதை கண்டித்து திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற எம்.பியுமான கனிமொழி கருணாநிதி ஆகியோர் தவெக அரசை கண்டித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவு:
மு.க.ஸ்டாலின்:
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா? அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
கனிமொழி கருணாநிதி:
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை, தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் தி.மு.க அடிபணியாது.
உதயநிதி ஸ்டாலின்:
முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது #SofaModel அரசு.
அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
What's Your Reaction?