விசிக மாநாடு: விடுமுறை அளித்த த.வெ.க. அரசு

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 17, 2026 - 10:27
விசிக மாநாடு: விடுமுறை அளித்த த.வெ.க. அரசு
vck meeting

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற உள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள்:

மாநாட்டு திடலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண், பெண் தொண்டர்களுக்கு தனித்தனி அமர்வுப் பகுதிகள், தடுப்புக் கம்பிகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேடை, எல்இடி திரைகள் மற்றும் மின்வசதிகள் அமைக்கும் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன.

விசிக தலைவர் திருமாவளவன் தொண்டர்களை நேரடியாக சந்திக்கும் வகையில் நடைபாதை மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

1,500 போலீசார் பாதுகாப்பு:

மாநாட்டையொட்டி ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரத்தில் ஆறு இடங்களில் வாகன நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்தில் மாற்றம்:

பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுவதால் உளுந்தூர்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் ஆசனூர், எலவனாசூர்கோட்டை, திருக்கோவிலூர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. சேலம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தியாகதுருவம், திருக்கோவிலூர் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் விக்கிரவாண்டி, விழுப்புரம், மடப்பட்டு வழியாக திருப்பிவிடப்பட்டு, பண்ருட்டி வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு ஒருநாள் விடுமுறை:

மாநாட்டையொட்டி ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனை முன்னிட்டும் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து:

இதற்கிடையே, விசிக மாநாட்டையொட்டி தமிழக முதலமைச்சர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்:

 “தமிழ் தேசிய சிந்தனை களத்தில் தமிழக வெற்றி கழகம் எங்கள் அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இந்த நிலையில் தாங்கள் முன்னெடுத்து வரும் இந்த தமிழ் தேசிய எழுச்சி மாநாடு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.”

"மேலும், தமிழ்மொழியின் பெருமை, தமிழர் உரிமைகள் மற்றும் தமிழ் தேசியத்தின் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் திருமாவளவனின் முயற்சி பாராட்டுக்குரியது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், தீர்மானங்கள் மற்றும் செயல்திட்டங்கள் உருவாகிட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன்.”

"மாநாட்டின் முடிவுகள் தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு புதிய திசையை அமைக்கட்டும்" என்றும் முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் மாநாட்டு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உளுந்தூர்பேட்டையில் இன்று நடைபெறும் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow