சர்ப்ரைஸாக வந்த PF வட்டி பணம்… குஷியில் சந்தாதாரர்கள்..!
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், 2025-26 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி (PF) வட்டித் தொகையை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், ஊழியர்களின் PF கணக்குகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகைக்கு அறிவிக்கப்பட்ட 8.25 சதவீத வட்டி சேர்க்கப்படுகிறது.
ஊழியர்கள் மற்றும் அவர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்தும் பங்களிப்புகள் மூலம் PF நிதி உருவாகிறது. பணிக்காலம் முடிந்த பிறகு இந்த சேமிப்பை பயன்படுத்தும் வசதி இருப்பதுடன், மருத்துவச் செலவு, வீடு கட்டுதல் உள்ளிட்ட குறிப்பிட்ட அவசர தேவைகளுக்காக விதிமுறைகளுக்கு உட்பட்டு PF தொகையை முன்கூட்டியே பெறவும் முடியும்.
ஒரு ஊழியர் பல நிறுவனங்களில் பணியாற்றினாலும், UAN எண்ணின் மூலம் அவரது PF கணக்கு விவரங்களை ஒருங்கிணைத்து பராமரிக்க முடியும். தற்போது 8.25 சதவீத வட்டி விகிதத்தின் அடிப்படையில், உறுப்பினர்களின் கணக்கு இருப்புக்கு ஏற்ப வட்டி தொகை மாறுபட்டு வரவு வைக்கப்படுகிறது. சிலருக்கு ஆயிரம் ரூபாய் அளவிலும், அதிக சேமிப்பு வைத்திருப்பவர்களுக்கு அதைவிட அதிகமாகவும் வட்டி கிடைக்கிறது.
வட்டி வரவு வைக்கப்பட்டதும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு EPFO சார்பில் SMS அனுப்பப்படுகிறது. மேலும், Member e-Sewa இணையதளம், UMANG செயலி மற்றும் Passbook Lite வசதி மூலம் PF இருப்பு, மாதாந்திர பங்களிப்பு மற்றும் வட்டி விவரங்களைச் சரிபார்க்கலாம்.
ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த, UAN செயல்பாட்டில் இருப்பதுடன், ஆதார், PAN மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் அதனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தகவல்கள் சரியாக இருந்தால், EPFOவின் டிஜிட்டல் சேவைகளை உறுப்பினர்கள் முழுமையாக பயன்படுத்த முடியும்.
What's Your Reaction?