கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Jun 25, 2026 - 15:40
கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 25) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

நாளை (ஜூன் 26) தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும். புதுவையிலும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக நிலவி வரும் நிலையில், இந்த மழை பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow