வந்தே மாதரம் 150 ஆண்டு நிறைவு : நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்
வந்தே மாதரம் 150 ஆண்டு நிறைவையொட்டி இன்று நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
மக்களவையில் நடைபெற்று வரும் வந்தே மாதரம் 150 ஆண்டு நிறைவு சிறப்பு விவாதத்தில் பிரியங்கா காந்தி எம்.பி. பேசியதாவது:- சுதந்திர போராட்டத்தின் அடையாளமாகவே வந்தே மாதரம் திகழ்கிறது. காங்கிரஸ் மாநாட்டில் தான் முதல் முறையாக வந்தே மாதரம் பாடப்பட்டது.ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தியது வந்தே மாதரம்.
பிரதமர் மோடி நன்றாக பேசுகிறார். ஆனால் அதில் உண்மையில்லை. முன்னுக்கு பின் முரண் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு நேரு அமைத்து தந்த அடித்தளம்தான் காரணம்.நேரு குறித்து குறை கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளார் பிரதமர் மோடி
நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே பாஜக அரசு வந்தே மாதரம் குறித்து விவாதம் நடத்துகிறது. மேற்கு வங்க தேர்தல் வருவதால் தான் வந்தே மாதரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக.கடந்த காலம் பற்றி பேசி பாஜக அரசியல் செய்கிறது. நாட்டின் வளர்ச்சி குறித்த எதிர்கால இலக்குகள் பாஜகவிடம் இல்லை. உங்களுக்கு அரசியல்தான் முக்கியம். எங்களுக்கு நாட்டு மக்களே முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல்காந்தி அவமதிப்புவிட்டார் : பிரதமர் குற்றச்சாட்டு
மு்ன்னதாக தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மக்களவையில் இன்று வந்தே மாதரம் குறித்த விவாதத்தைத் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: ”நாடாளுமன்றத்தில் முக்கியமான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் இல்லை. முதலில் நேரு, தற்போது ராகுல் காந்தி, வந்தே மாதரத்தை புறக்கணித்துள்ளார்.
காங்கிரஸ் வந்தே மாதரத்தில் சமரசம் செய்து கொண்டு முஸ்லிம் லீக் முன் சரணடைந்தது. வந்தே மாதரத்தை துண்டுதுண்டாக்கினார் நேரு.” எனத் தெரிவித்தார்.
மேலும், ”வந்தே மாதரம் முஸ்லிம்களைத் தூண்டிவிடும்” என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நேரு எழுதிய கடிதத்தை நினைவுகூர்ந்த மோடி, ”வந்தே மாதரத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டது, தேசியப் பாடல் அவமதிக்கப்பட்டது” என்றார்.
மோடிக்கு ராகுல் பதிலடி
இதனிடையே, நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய ராகுல் காந்தியிடம், வந்தே மாதரம் விவாதத்தில் கலந்துகொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பிரியங்கா காந்தியின் உரையைக் கேளுங்கள்” என்று பதிலளித்தார்.
What's Your Reaction?

