வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது.. மின் உற்பத்தி பாதிப்பு.. மின் தட்டுப்பாடு அபாயம்

வடசென்னை அனல் மின் நிலையத்தில், 2 நிலைகளிலும் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதின் காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் பழுது.. மின் உற்பத்தி பாதிப்பு.. மின் தட்டுப்பாடு அபாயம்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் ஐந்து அலகுகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல், இரண்டாவது நிலையில் செயல்பட்டு வரும், இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1,200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் முதலாவது நிலையின் 3வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டாவது நிலையில் 2வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

பழுதினை சரி செய்யும் பணியில் அனல்மின் நிலைய அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் அந்தந்த அலகுகளில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகரித்துள்ளது. தற்போது வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow