திடீர் IT ரெய்டு.. அச்சுறுத்தல் நடவடிக்கை என திருமாவளவன் கண்டனம்

கடலூரில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் வீட்டில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது, அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Apr 10, 2024 - 10:39
திடீர் IT ரெய்டு.. அச்சுறுத்தல் நடவடிக்கை என திருமாவளவன் கண்டனம்

தமிழ்நாட்டில், வரும் 19தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சிதம்பரம் தொகுதியில்  விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். 

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள முருகானந்தம் என்பவரது வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தங்கி திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 7 மணி அளவில் கடலூர் வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழுவினர் திடீரென திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் நுழைந்து அதிரடியாக சோதனை செய்தனர். மேலும் திருமாவளவன் அறையில் நீண்ட நேரம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

சோதனையின் முடிவில் எதுவும் கைப்பற்றாத நிலையில் இன்று 
(ஏப்ரல் 10 ) கடலூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு ஆஜராக வேண்டும் என வீட்டின் உரிமையாளருக்கு சம்மன் அளித்து விட்டு சென்றனர். 

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது திருமாவளவன் காட்டுமன்னார் கோயில் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். வருமான வரித்துறையினர் முகாந்திரம் இல்லாமல் இந்த சோதனை நடத்தியிருப்பது மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல் என்று திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow