மத்திய அரசின் திட்டங்கள் 'டப்பிங்’! - திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து அண்ணாமலை குற்றச்சாட்டு!

Feb 19, 2024 - 22:13
Feb 19, 2024 - 22:14
மத்திய அரசின் திட்டங்கள் 'டப்பிங்’! - திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாக்களித்த மக்களை மண்குதிரை பட்ஜெட் மூலம் நட்டாற்றில் நிறுத்தியிருப்பதாக சாடியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து வெளியிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, வெற்று அறிவிப்புகள் மூலம் விளம்பர ஆட்சி மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் திமுக, மீண்டும் ஒரு முறை வாக்களித்த மக்களை மண்குதிரை பட்ஜெட் மூலம் நட்டாற்றில் நிறுத்தியிருக்கிறது. ஆண்டு தோறும் தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் அதே அரும்படியான முதிர்மதைகள் என ஒகறுமே தமிழகல அரமந்த சார்பில் ஆண்டுகளாக தமிழக பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்த அதே திட்டங்கள், இதுவரை செயல்படுத்தப்படாமல், புதிய திட்டங்களைப் போல ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறி அறிவித்த பெரும்பாலான திட்டங்களைச் செயல்படுத்த எந்த நிதியும் திமுக ஒதுக்கியதாகத் தெரியவில்லை. திமுகவின் நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசின் நலத் திட்டங்களை நீக்கி விட்டால், எஞ்சியிருப்பது. பேருந்து நிலையத்துக்குப் பெயர் வைப்பதும், ஒவ்வொரு ஒவ்வொரு ஆண்டும் வெறும் அறிவிப்பு அளவிலேயே நிற்கும் விளம்பரங்களும் மட்டும்தான். மத்திய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர் வைப்பது, அல்லது மத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது என, மத்திய அரசின் திட்டங்களை, தங்கள் சிந்தனையில் உதித்தது போலக் காட்டிக் கொள்ளும் திமுக, தொலைநோக்குப் பார்வை இல்லாததால், தங்கள் நாடகத்தை முழுமையாக அரங்கேற்ற முடியாமல் மாட்டிக் கொள்வதுதான் நகைச்சுவை" என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் நலத்திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் எவ்வாறு பெயர் மாற்ற முயற்சித்திருக்கிறார்கள் என்பதற்கான சில உதாரணங்கள் பின்வருமாறு, "மத்திய அரசின் போஷன் திட்டத்தை ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற பெயர் வைத்து, தங்கள் திட்டம் என்று காட்ட முயற்சித்திருக்கிறார்கள். இதற்கான நிதி மத்திய அரசால் வழங்கப்படுகிறது. கடந்த 1919 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் கிராமப்புறங்களில் வெறும் 17% பகுதிகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டிருந்தது. அனைத்து வீடுகளுக்கும் குழாயில் குடிநீர் வழங்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், செயல்படுத்தப்பட்ட பிறகே, 46 லட்சம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஐம்பது ஆண்டுகளில், ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்த திமுக, தற்போது ஓடி வந்து திராவிட மாடல் அரசு என்று கூறிக் கொள்ள வெட்கமாக இல்லையா? பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு, கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அதற்கான நிதி மத்திய அரசிடம் இருந்துதான் நேரடியாக பயனாளிகளுக்கு வரும். திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டால், மக்கள் நம்பி விடுவார்களா என்ன? தன் குடும்பத்தாருக்காக மட்டுமே வாழ்ந்த கலைஞர், எப்போது பொதுமக்களைப் பற்றி நினைத்தார் என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்கிறது. பிரதமரின் கிராமச் சாலை திட்டம், முதல்வரின் கிராமச் சாலை திட்டமாக உருமாறியிருக்கிறது. அவற்றை ஒழுங்காகச் செயல்படுத்தியுள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. மலைக் கிராமங்களில், அவசர மருத்துவச் சிகிச்சைக்குச் சாலை வசதி இல்லாமல் டோலியில் கட்டி தூக்கிச் செல்லும் அவல நிலைதான் இன்னும் தமிழகத்தில் இருக்கிறது. இது தான் திராவிட மாடலின் உண்மை முகம்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, மத்திய அரசின் வழிகாட்டுதலின் பெயரிலேயே வங்கிகள் கடன் உதவி வழங்குகின்றன. இதில் திமுக அரசின் பங்களிப்பு என்ன என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் வங்கியில் நகையை அடமானம் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகைக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் என்று பொய் சொல்லி ஏமாற்றியதை அவ்வளது எளிதாக மக்கள் மறக்கத் தயாராக இல்லை.

சகி நிவாஸ் என்ற பெயரில், மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் விடுதிகளுக்கு, தோழி விடுதி என்று பெயர் மாற்றி விளம்பரம் செய்துகொண்டிருக்கிறது திமுக. தமிழகத்தில் 20 சகி நிவாஸ் மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அது தெரியாமல், 10 விடுதிகள் என்று தமிழக நிதிநிலை அறிக்கையில் தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  நகரங்களின் பசுமை பகுதிகளை அதிகரிக்க, மத்திய அரசு செயல்படுத்தி வரும் 'நகரங்களில் வனங்கள் என்ற திட்டம், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே 10 பசுமை வழிகள், இந்தத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை அப்படியே மறைத்து, புதிய திட்டத்தைப் போல அறிவித்து யாரை ஏமாற்ற முயற்சிக்கிறது திமுக அரசு?

நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், மத்திய அரசின் ரூ.1,200 கோடி நிதியுதவியுடன், கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே, இந்தத் திட்டம் நிறைவுபெற்று பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் போல ரூ.1,517 கோடி நிதி ஒதுக்கி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பது மக்களை முட்டாள் ஆக்கும் செயல்.

தமிழகத்தில் மாதிரி செலவிட்டுள்ளதாக பள்ளிகளை அமைக்க ரூ.452 கோடி தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, கடந்த மூன்று ஆண்டுகளில் அதை விட பத்து மடங்குக்கும் அதிகமாக ரூ.5,856 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்பதைக் குறிப்பிட மறந்துவிட்டார்கள்.

பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 5 ஆண்டுகளில் ரூ.7,500 கோடி செலவிடப்படும் என்று அறிவித்து சென்ற ஆண்டு வரை, ரூ 3,500 கோடி நிதி இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அறிக்கையில், தற்போதுதான் ரூ.2,497 கோடி மதிப்பில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறி மேலும் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். கடந்த ஆண்டு வரை எந்தப் பணிகளுமே நடைபெறவில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.  மத்திய அரசின் விஸ்வகர்மா நலத்திட்டத்திற்கு தமிழக கைவினைஞர் மேம்பாட்டு திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு நிதி வழங்குவது மத்திய அரசு தான்.

இப்படி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அத்தனை நலத்திட்டங்களுமே மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் பல ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்தான். அவற்றின் பெயர்களை மாற்றி திராவிட ஸ்டிக்கர் ஒட்ட நினைத்து மூக்கறுபட்டு நிற்கிறது திமுக. திமுக தங்கள் சொந்த சிந்தனையில் எந்தத் திட்டங்களுமே அறிவிக்கவில்லையா என்று கேட்டால், ஆம், அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும், ஒரு வார்த்தை கூட மாறாமல் அறிவிக்கிறார்கள் ஆனால் எதையும் இதுவரை செயல்படுத்தியதில்லை. 

அடையாறு ஆற்றை சீரமைக்க, இந்த ஆண்டு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றை சீரமைக்க, கடந்த ஆண்டும் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோவில்கள் திருப்பணிகளுக்கு, ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு மட்டும் வெளியிடுவார்கள். இதுவரை அந்த நிதி முழுமையாக செலவிடப்பட்டதில்லை. மாறாக,  கோவில் நிதியையே எடுத்து செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மாறாத மற்றொரு அறிவிப்பு, புதிய பேருந்துகள் கொள்முதல் மின் பேருந்துகள் கொள்முதல் என்ற அறிவிப்பு இருக்கும் பேருந்துகளையே இயக்க ஓட்டுநர்கள் பணியிடங்களை நிரப்பாமல், ஒவ்வொரு ஆண்டும் வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிடுவதனால் என்ன பலன்?

மீனவர்கள் நலன் காக்க ரூ.1,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் என, கடந்த ஆண்டு அறிவித்த திமுக, அதில் எவ்வளவு நிதி இதுவரை செலவிட்டுள்ளது என்பது பற்றித் தெரிவிக்கவில்லை. அந்த திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய எந்த விவரமும் கூறப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசுப் பணி தேர்வாணையம் மூலமாக வழங்கப்பட்ட பணியிடங்கள் வெறும் 10,600 மட்டுமே மீதமுள்ள சுமார் 50,000 பணியிடங்கள் எவ்வாறு நிரப்பப்பட்டன என்பதைத் தமிழக அரசு தெளிவுபடுத்தவேண்டும்.

எல்லாவற்றிற்கும் உச்சமாக, தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 19 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று கூறிவந்த நிலையில், வெறும் 12 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளது திமுக அரசின் நிதி மேலாண்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அடுத்த ஆண்டில், தமிழக அரசின் மொத்த கடன் சுமை ரூ. 8.3 லட்சம் கோடியாக உயரும் என்பதை மட்டும் குறிப்பிட்ட திமுக, தமிழகத்தின் மொத்த கடன் சுமையை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட மறந்துவிட்டது. தமிழகத்தின் மொத்த கடன் சுமை ரூ.9.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும். கடந்த 2021ஆம் ஆண்டு, ரூ. 5.6 லட்சம் கோடியாக இருந்த மொத்த கடன் தொகையை, 4 ஆண்டுகளின் நிறைவில் ரூ.4 லட்சம் கோடியாக அதிகரிக்கச் செய்ததுமட்டுமே திமுகவின் சாதனை" என தெரிவித்துள்ளார். 

மேலும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் இடம்பெறவில்லை என சில வாக்குறுதிகளை அண்ணாமலை பட்டியலிட்டதாவது,  "சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும், 100 நாள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும், கல்வி கடன் ரத்து செய்யப்படும், கோவிட் 19 தொற்றுக் காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைக்க எளிய தவணைகளில் திரும்பச் செலுத்தக் கூடிய வகையில் கடன் உதவி செய்வதற்கென்று 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும், நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 4000 ஆக உயர்த்தி வழங்கப்படும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும், தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் நான்காம் தலைமுறை /ஐந்தாம் தலைமுறை (4G/5G) இணையசேவையில் மாதம் 10 GB பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் கூடிய இணையதள இணைப்புடன் கைக்கணினி (Tablet) வழங்கப்படும், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் பணிநிரந்தரம்,மாதம் ஒரு முறை மின் கட்டணம், இப்படி 511 தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதிகளை பற்றிய எந்த அறிவிப்புகளும் இல்லாத நிதிநிலை அறிக்கையை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வாசிப்பதால் மக்களுக்கு என்ன பயன்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

"ஆண்டுதோறும் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் அயல் நாடுகளுக்கு குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் முதலமைச்சர் இதுவரை, ஒரு ரூபாய் முதலீடு கூட தமிழகத்துக்குக் கொண்டு வரவில்லை என்பதே யதார்த்தம். நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் கொண்டு வரும் சிந்தனையும் இல்லாமல் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களையும் முழுமையாகச் செயல்படுத்தாமல், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், கடன் சுமையை மட்டும் மக்கள் தலையில் சுமத்தும் இந்த உளுத்துப் போன திராவிட மாடலைத் தூக்கிக் கொண்டு எத்தனை நாள் செல்ல முடியும்? மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow