புதுச்சேரியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட கொடுமை தீராத வேதனை... நடிகை சோனா கண்டனம்..

Mar 9, 2024 - 19:10
புதுச்சேரியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட கொடுமை தீராத வேதனை... நடிகை சோனா கண்டனம்..

மார்ச் 8-ம் தேதி பெண்களை பெருமைப்படுத்தி கொண்டாடுவதாகச் சொல்கிறது உலகம். ஆனால் யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறதா? என்று நடிகை சோனா ஹைடன் கேள்வி எழுப்பி உள்ளார். 

புதுச்சேரியில் காணாமல் போன  9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கொடுமை தீராத வேதனையை தருவதாக நடிகை சோனா ஹைடன் கூறியுள்ளார். ஒரு பெண்ணாக இருப்பதென்றால் என்னவென்று கூட அறியாத வயதுள்ள குழந்தையை இப்படி சிதைத்திருப்பது, நாம் நாகரிக சமூகத்தில்தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த அவமானகரமான சம்பவம் நம்முடன் மிருகங்களும் வசிப்பதையே காட்டுவதாக கூறியுள்ளார். 

நடிகை, திரைபிரபலம் என்றாலும் தானும் தன் சக ஊழியர்களும் கூட இதுபோன்ற காட்டுமிராண்டித்தன நிகழ்வுகளை எதிர்கொண்டு மீண்டிருக்கிறோம் என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்று சோனா வேதனை தெரிவித்துள்ளார். இதுபோன்ற மிருகங்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பெண்களான தாங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பதாகவும், அது தீராத, முடிவடையாத ஓட்டமாகவே இருப்பதாகவும், வளர்ந்த சமூகத்திலும் பெண்கள் அடக்கப்படுவதும், இழிவுபடுத்தப்படுவதும் தவறான முத்திரை குத்தப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இன்னும் எவ்வளவு காலம் மவுனம் காக்கப் போகிறோம்? நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றும் இனியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு பேரச்சம் ஏற்படும் வகையில் பெருங்குரலாக அது இருக்க வேண்டும் என்றும் நடிகை சோனா கேட்டுக்கொண்டுள்ளார். புதுச்சேரியில் நடந்த கொடுமையை வன்மையாகக் கண்டிப்பதுடன், தனது ஆழ்ந்த இரங்கலை உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்குத்  தெரிவித்துக் கொள்வதாகவும், அந்த பிஞ்சு நெஞ்சின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் நடிகை சோனா தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow