அஜித் பவார் உடல் தகனம்: அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி
விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அரசியல்கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமனோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் நேற்று காலை புணே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் அஜித் பவார், விமானிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அஜித் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் இன்று பகல் 12 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.இறுதிச் சடங்கில் அஜித் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவார், மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். முன்னதாக பாராமதியில் உள்ள அஜீத் பவாரின் இல்லத்தில் இருந்து வித்யா பிரதிஸ்தான் திடலுக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட அவரின் உடலுக்கு சாலையின் இருபுறங்களிலும் நின்று மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கருப்பு பெட்டி மீட்பு
விபத்துக்கான காரணம் என்ன? போன்ற கேள்விகள் நிலவுகிறது. இந்த நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த விமான விபத்து புலனாய்வு அமைப்புக் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.43 மணிக்குப் பிறகு என்ன நடந்தது? என்பது கருப்புப் பெட்டி உரையாடல் மூலம் கண்டுபிடிக்கப்படும். அதன்மூலம், விமான விபத்துக்கான காரணம் தெரியவரும்.
What's Your Reaction?

