ஊழல் குடும்பம் எல்லாம் உள்ளே இருப்பாங்கன்னு பிரதமர் மோடி கேரண்டி கொடுப்பார்.. அண்ணாமலை அதிரடி

மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு கோபாலபுரத்து ஊழல் குடும்பம் எல்லாம் உள்ளே இருப்பாங்கன்னு பிரதமர் மோடி கேரண்டி கொடுப்பார் என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்திற்கு ரோடு ஷோ என்பது புதிது. பாஜக நடத்துவது ரோடு ஷோ அல்ல, மக்கள் தரிசன யாத்திரை என்றும் கோவை தொகுதி பாஜக வேட்பாளரும், மாநில பாஜக தலைவருமான அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். 

Apr 11, 2024 - 13:29
ஊழல் குடும்பம் எல்லாம் உள்ளே இருப்பாங்கன்னு பிரதமர் மோடி கேரண்டி கொடுப்பார்.. அண்ணாமலை அதிரடி

பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளிப்பதையே வேலையாக வைத்திருப்பவர் அண்ணாமலை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாக கோவையில் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு யாரையும் அழைத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துபவன் நான்னில்லை யாரை கருத்துகளை தெரிவிக்கிறார்களோ, பொதுமக்கள் பிரச்னைகளை முன்வைக்கிறார்களோ அவர்களையே பத்திரிகையாளர்கள் சந்திப்பதாக அண்ணாமலை விளக்கம் அளித்தார். 

மேலும் பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தினால் மக்கள் வரமாட்டார்கள். இபிஎஸ் ரோடு ஷோ சென்றால் பார்ப்பதற்கு மக்கள் தயாராக இல்லை. ஆனால் தமிழகத்தில் பாஜக தலைவர்கள் வீதிக்கு வந்து மக்களை பார்க்கிறார்கள். தங்களது நேரத்தை செலவளித்து சாமானிய மக்கள் பிரதமரை பார்க்க வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை இது ரோடு ஷோ அல்ல மக்கள் தரிசன யாத்திரை. மற்ற கட்சி தலைவர்கள் ரோடு ஷோ செல்ல தயாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். 

பாஜகவில் இருப்பவர்கள் சமூக விரோதி என டிஆர்பி ராஜா பேசியது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, சாராயம் விக்கிற டிஆர்பி ராஜாவோட அப்பா டி.ஆர்.பாலுவே ஒரு சமூக விரோதி. தஞ்சையில் சாராய ஆலை திறக்க கருத்து கேட்பு கூட்டம் நடந்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தடியடி நடத்தி விரட்டப்பட்டனர். அதனால் 2014-இல் தஞ்சையில் தோற்றதால் ஸ்ரீபெரும்புதூருக்கு டி.ஆர்.பாலு தஞ்சமடைந்துள்ளார். சாராய ஆலை நடத்தி ஏராளமான பெண்களின் தாலி அறுந்துள்ளது. தந்தை சாராய ஆலை நடத்துகிறார். அதனை மகன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்காணிக்கிறார் என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். 

23 பிரச்னைகளுக்கு பிரதமர் மோடி கேரண்டி கொடுப்பாரா என முதலமைச்சர் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு வரும் மக்களவைத் தேர்தல் முடிவிற்குப்பிறகு கோபாலபுரத்து ஊழல் குடும்பம் எல்லாம் உள்ளே இருப்பாங்கனு பிரதமர் மோடி கேரண்டி கொடுப்பார் என்று அண்ணாமலை கூறினார். இது மட்டுமின்றி பிரிவினை வாதம் பேசும் சக்திகளை ஒழிக்க கேரண்டி கொடுப்பார், திமுக என்ற தீய சக்தியிடம் இருந்து தமிழகத்தில் உள்ள எட்டரை கோடி மக்களையும் காப்பாற்றுவேன் என்ற கேரண்டியை கொடுப்பார்.

டாஸ்மாக், டி.ஆர்.பாலு சாராய ஆலையிலிருந்து காப்பாற்றுவேன் என்ற கேரண்டியை கொடுப்பார். தமிழ்நாட்டு குடும்ப ஆட்சியை ஒழிப்பேன் என்ற கேரண்டியை பிரதமர் கொடுப்பார் என்று அண்ணாமலை கூறினார். கனவுல வாழ்ந்துட்டு இருக்கிற ஸ்டாலினுக்கு  எல்லாம் கேரண்டி கொடுக்கமாட்டார். வேங்கைவயல் சம்பவத்துக்கு ஸ்டாலின் கேரண்டி கொடுப்பாரா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow