செல்ல நாயை அடித்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: அடிதடி,ரகளை,மண்டை உடைப்பு கலவரமான கல்யாண மண்டபம் 

உபியில் செல்ல நாயை அடித்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டு மண்டை உடைப்பு சம்பவங்கள் அரங்கேறி கல்யாண மண்டபமே கலவரபூமியாக மாறியது. 

செல்ல நாயை அடித்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: அடிதடி,ரகளை,மண்டை உடைப்பு கலவரமான கல்யாண மண்டபம் 
செல்ல நாயை அடித்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் காகா கோட்வாலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில்  கடந்த புதன்கிழமை சுமித் கேஷர்வானி என்ற மணமகனுக்கும், அவரது காதலிக்கும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதற்காக மணமகளின் குடும்பத்தினர் பிரயாக்ராஜிலிருந்து பதேபூருக்கு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் வந்திருந்தனர். மணமகன் தரப்பு பாரம்பரிய திருமண ஊர்வலத்துடன் அந்த இடத்தை அடைந்தனர். மாலை மாற்றுதல் உள்ளிட்ட ஆரம்ப விழாக்கள் அமைதியாக நிறைவடைந்தன. 

அதிகாலை 4 மணியளவில், திருமண பீடத்தில் நகைகள் வழங்கும் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​மணமேடை அருகே கட்டப்பட்டு இருந்த மணமகளின் வளர்ப்பு நாய் குரைக்கத் ஆரம்பித்தது. இதனால் எரிச்சல் அடைந்த மணமகன் தரப்பு இளைஞன் அந்த நாயை அடித்தார். இதைப்பார்த்த மணபெண், அவரது குடும்பத்தினர் அதிர்ந்து போனார்கள். அந்த இளைஞரை மணபெண் சத்தம் போட்டார்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக வெடித்தது. இருதரப்பினரும் கம்புகள், நாற்காலிகளால் தாக்கிக்கொண்டனர். இதில் பலரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. தகவல் அறிந்த திருமண மண்டபத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோதலை தடுத்தனர். இதன் பின் போலீசார் நடத்திய விசாரணையில் மணமகள் இனி திருமணத்தைத் தொடர விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து திருமணம் நின்று போனது. இருதரப்பிலும் வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் திருப்பித் தரப்பட்டன. இந்த மோதல் தற்போது சோசியல் மீடியாக்களில்  வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow