திருப்பதி கோயிலில் அன்னதானம் கூட தரமாக இல்லை?: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் வேதனை
திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அன்னதானம் கூட ஜெகன் மோகன் ஆட்சியில் தரமாக இருந்தது இல்லை என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாதம் அறக்கட்டளை மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு இலவச சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது. 1985-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், திருமலையில் மாதா புஷ்பாஞ்சலி மண்டபம், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் பல இடங்களில் காலை முதல் இரவு வரை தடங்கலின்றி, அன்னதானம் மற்றும் லட்டு பிரசாதத்தை வழங்கி வருகிறது.
அன்னபிரசாதத்தில் ரசம், சாம்பார், கூட்டு, தயிர், இனிப்பு வகைகள் மற்றும் மசால் வடை பரிமாறப்படுகிறது.தினமும் சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இந்த பிரசாதத்தை பெறுகின்றனர். இந்த அன்னபிரசாதம் கடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் தரமாக இல்லை என தற்போதைய அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
திருமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான நெய்யில் மட்டும் கலப்படம் நடக்கவில்லை, அன்னதானப் பொருட்கள் கூட தரமாக பக்தர்களுக்கு தரமாக வழங்கப்படவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு லட்டு பிரசாதத்தின் தரம் மட்டுமல்ல, அன்னபிரசாதத்தின் தரமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது லட்டு, அன்னபிரசாதம் தரமாக இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?

