கஞ்சா போதை.. பட்டா கத்தியோடு ஆவடியில் அட்டகாசம் செய்த ரவுடிகள்.. அச்சத்தில் மக்கள்

Ganja addiction

Apr 26, 2024 - 17:37
கஞ்சா போதை..  பட்டா கத்தியோடு ஆவடியில் அட்டகாசம் செய்த ரவுடிகள்.. அச்சத்தில் மக்கள்

கஞ்சா போதையில் அக்கம் பக்கத்தினரை வெட்டி அட்டாகாசத்தில் ஈடுபட்ட ரவுடிகளை ஆவடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

திருமுல்லைவாயல் கணபதி நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு சொந்தமான வீட்டில் முத்து என்பவர் குடியிருந்து வந்துள்ளார். முத்துவின் நண்பர்கள் சிலரும் அதே வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் முத்துவும் அவரது நண்பர்களும் போதையில் செல்போனில் தகாத வார்த்தைகளில் சத்தமாக பேசி கொண்டு இருந்துள்ளனர். 

அப்போது அருகில் வசிக்கும் சந்திரலேகா என்ற பெண் தகாத வார்த்தைகளை பேச கூடாது எனவும் அருகில் பெண்கள், குழந்தைகள் உள்ளனர் என்றும் கூறி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்து மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தங்களது அறையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துகொண்டு வந்து சந்திரலேகாவை சரமாரியாக வெட்டினர். இதில் சந்திரலேகாவிற்கு தலை,கை,உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. 

 இந்த சண்டையை தடுக்க வந்த சீதாலட்சுமி, காமேஷ் ஆகியோரையும் வீடு புகுந்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனை தொடர்ந்து போதையில் அந்த இளைஞர்கள் அந்த பகுதியில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பட்டா கத்தியால் வெட்டி  தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் விஜய் உள்ளிட்ட மேலும் சிலருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் போதை ஆசாமிகள் குறித்து  காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் கிருஷ்ணன் அரை மணி நேரத்தில் தப்பி ஒடிய இருவரையும் கைது செய்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில்,  பொதுமக்களை தாக்கியது திருப்போரூர் பகுதியை சேர்ந்த அபினேஷ் மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அபினேஷ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் தாம்பரம்,செங்கல்பட்டு,மண்ணிவாக்கம்,திருப்போரூர் ஆகிய காவல்நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக இருந்து வந்துள்ளனர். மேலும் விஷ்ணு A பிரிவு ரவுடியாகவும் அப்பகுதியில் வலம் வந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow