தேர்தலில் முறைகேடு முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன்: அடம் பிடிக்கும் மம்தா பானர்ஜி
மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக முறைகேடு செய்துள்ளதாகக் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி, பாஜக முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக 207 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள் சதியால் மாற்றப்பட்டவை என்றும், பாஜக வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்துள்ளதாகவும் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவில்லை என்றும், அதன் உதவியுடன்தான் பாஜக இந்த முறைகேடுகளைச் செய்துள்ளது என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சுமார் 90 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளைத் தங்களது கட்சியிடமிருந்து பாஜக திருடிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் ஒரு 'வில்லனாக'ச் செயல்பட்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரால் ஜனநாயகம் சீரழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ள மம்தா பானர்ஜி, வாக்கு எண்ணும் மையத்தில் தான் தாக்கப்பட்டதாகவும், சிசிடிவி கேமராக்கள் அணைக்கப்பட்டிருந்த வேளையில் தன்னை எட்டி உதைத்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிய பாஜக, நீதிமன்றத்திலும் தங்களுக்கு நீதி கிடைக்க விடாமல் செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தோல்வி மக்களால் கொடுக்கப்பட்டது அல்ல, சதியால் உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ள மம்தா பானர்ஜி, முதல்வர் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தனது வாழ்நாளில் இவ்வளவு மோசமான தேர்தலைத் தான் பார்த்ததில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?