விசில் சின்னத்திற்கு வாக்களித்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரல்: தவெக நிர்வாகி ஒருவர் கைது
தமிழக வெற்றிக் கழகத்தின் விசில் சின்னத்திற்கு வாக்களித்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அக்கட்சி தொண்டர்கள் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர். திருப்பத்தூரில் விசில் வாக்களித்தை வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி சீமான் உள்பட திரைபிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணி நேர நிலவரப்படி , 2 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 712 வாக்குகள் பதிவாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு முதல்முறையாக பொதுத்தேர்தலை சந்திக்கிறது. இக்கட்சிக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் விசில் சின்னத்திற்கு வாக்களித்தை செல்போனில் படம் எடுத்து வந்து, அதனை சமூக வலைதளங்களில் தவெகவினர் பலர் பதிவிட்டு வருகின்றனர். வாக்குசாவடி மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
ஆனால் இந்த தடையை மீறி தவெகவினர் செல்போன் கொண்டு சென்று வாக்களிப்பதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருவது பலரையும் அதிர்ச்சி உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில், திருப்பத்தூர் தொகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக வெளியிட்ட தவெகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குச்சாவடிக்குள் அவர் வீடியோ எடுப்பதை சிசிடிவி மூலம் அதிகாரிகள் உறுதி செய்ததை அடுத்து கைது நடவடிக்கை காவல்துறையினர் மேற்கொண்டு உள்ளனர்.
What's Your Reaction?