சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு
சட்டமன்ற தேர்தல் காரணமாக ஹோட்டல்கள், டீக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் உணவு கிடைக்காமல் பலரும் பரிதவித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 37.56 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குபதிவு நடைபெறும் இன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அலுவலகங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஈரான் அமெரிக்கா போர் காரணமாக கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ஹோட்டல்கள், டீக்கடைகள் பல திறக்கப்படவில்லை. தற்போது தேர்தல் விடுமுறை காரணமாக தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள், டீக்கடைகள் பரவலாக மூடப்பட்டுள்ளது. இதனால் காலை டிபன், மதிய உணவு கிடைக்காமல் பலரும் பரிதவித்து வருகின்றனர்.
சென்னை மாநகரை பொறுத்தவரை பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். பேச்சுலர்கள் ஆயிரகணக்கனோர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேன்சன், வீடு எடுத்து வசித்து வருகிறார்கள். இவர்கள் அன்றாட உணவுக்கு ஹோட்டல்களையே நம்பி இருக்கிறார்கள். தேர்தலையொட்டி ஹோட்டல்கள், டீக்கடைகள் மூடப்பட்டத்தால் இவர்களுக்கு உணவு கிடைக்காமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
வெறிசோடிய சாலைகள்
சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவையொட்டி இன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்கு ஏதுவாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படவில்லை. இதன்காரணமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களின் முக்கிய சாலைகள் வாகனங்கள் குறைந்த அளவே சென்றன. மக்கள் நடமாட்டம் இல்லாமல் முக்கிய சாலைகள் வெறிசோடி காணப்பட்டது.
பஸ் கிடைக்காமல் பயணிகள் தவிப்பு
தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து வழக்கமாக இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 6,234 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மேலும் ஏப்ரல் 21ம் தேதி முதல் ஏப்ரல் 23ம் தேதி பிற்பகல் வரைக்கும் மொத்தமாக 11,323 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களான கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் நள்ளிரவில் கடும் அவதியடைந்ததாக கூறப்படுகிறது.
பேருந்துகள் கிடைக்காததால் நள்ளிரவிலேயே மக்கள் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து போராடும் சம்பவமும் நிகழ்ந்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் பேருந்து கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.
பேருந்து கிடைத்து பயணத்தை தொடங்கியவர்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். அவர்கள் தாம்பரத்தை தாண்டவே பல மணி நேரங்கள் பிடித்திருக்கிறது. இரவு பேருந்து ஏறி காலையில் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கலாம் என திட்டமிட்டிருந்த பயணிகளும் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
What's Your Reaction?