இறந்த பாட்டிக்கு திதி கொடுக்க ஆமைக்கறி சமைத்த இளைஞர்கள்: அதிரடியாக கைது செய்த போலீஸ்
கர்நாடக மாநிலம் பெல்தங்கடியில் இறந்த தனது பாட்டிக்கு திதி கொடுக்க ஆமையை வேட்டையாடி சமைத்த இளைஞர்களை போலீசார் கைது செய்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் சோமாவதி ஆறு உள்ளது. இந்தநிலையில், பெல்தங்கடி போலீசாருக்கு சோமா வதி ஆற்றில் சிலர் ஆமைகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஆற்றின் கரையில் வாலிபர்கள் 4 பேர் ஆமைகளை கொன்று அவற்றை சமைத்து கொண்டிருப்பதை போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் சமைத்த, தீயில் கருகிய நிலையில் இருந்த 4 ஆமைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் 4 பேரின் பாட்டி தேவம்மா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அவருக்கு திதி கொடுப்பதற்காக சோமாவதி ஆற்றங்கரைக்கு சென்ற 4 பேரும் அங்கு அவரின் விருப்ப உணவான ஆமைக்கறியை வைத்து திதி கொடுத்தால், ஆத்மா சாந்தி அடையும் என முடிவு எடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த 4 பேரும் ஆற்றில் இருந்து 4 ஆமைகளை வேட்டை யாடி, அவற்றை கொன்று சமையல் செய்து படையலிட முடிவு செய்தனர். பிடிபட்ட ஆமைகளை தீயில் வாட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, பெல்தங்கடி போலீசார் அவர்கள் 4 பேரையும், ஆமைகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவர்களுக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கிய வனத்துறையினர், பின்னர் 4 பேரையும் விடுதலை செய்தனர். இந்த சம்பவம் அறிந்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

