16 வது நாளாக இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம்; வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்
சம வேலை சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 16-வது நாளாக சென்ன எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி ஆசிரியர்கள் 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டுகளாகியும் ஊதிய முரண்பாடு களையப்படாததால் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ),
கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் முக்கிய இடங்களில் ஆசிரியர்கள் போராடுவதும், அவர்களை போலீஸார் கைதுசெய்து பின்னர் விடுவிப்பதும் தொடர்கிறது.
இதற்கிடையே அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5-ம் தேதி முதல் பள்ளிகளும் திறக்கப்பட்டுவிட்டன. ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறையும் எச்சரித்தது. எனினும், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தநிலையில், 16 வது நாளாக போராட்டம் நடத்த இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இன்று எழும்பூர் பகுதியில் ஒன்று கூடினர். அவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.எழும்பூர் ரயில் நிலைய வாசலில் நின்றிருந்த பெண் ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்த போது போலீசார் தங்களை தாக்குவதாக பெண் ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கைதானவர்களை அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு அழைத்து சென்றனர்.
What's Your Reaction?

