அடுத்தடுத்து விலகும் ஆதரவாளர்கள்: காலியான கூடாரம், தனி மரம் ஆன ஓபிஎஸ்
மனோஜ் பாண்டியனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லபாண்டி நடராஜன் ஆகியோர் அடுத்தடுத்து விலகியதால், ஓபிஎஸ் கூடாரம் காலியானது.
எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஓபிஎஸ் தலைமையில் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் பலரும் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். அதிமுக உரிமை மீட்பு குழு என்று செயல்பட்டு வந்த ஓபிஎஸ், மீண்டும் அதிமுகவில் இணைய பல முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால் ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர் யாரையும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் இடம் பெற்றிருந்த மனோஜ் பாண்டியன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார்.
இதை தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சுப்புரத்தினம் கடந்த வாரம் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில், ஓபிஎஸ்யின் வலது கரமாக பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து அண்ணா அறிவாலயம் சென்று ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
இதே போன்று வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமசந்திரன் ஆகியோரும் திமுகவில் விரைவில் இணைய உள்ளதாக தெரிகிறது. அடுத்தடுத்து ஆதரவாளர்கள் ஓபிஎஸ்யை விட்டு விலகி உள்ளதால், அவரது கூடாரம் காலியாகி தனிமரமாகி உள்ளார்.
What's Your Reaction?

