தவெக எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடக்கிறது
தவெக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. தனிபெரும் கட்சியாக ஆட்சி முடியாத சூழலில், கம்யூனிஸ்ட்டுக்கள், காங்கிரசு, விசிக ஆகிய கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்று 1 மாதம் ஆகியுள்ளது. இந்த 1 மாதக்காலத்திற்கு பல்வேறு விமர்சனங்களை தவெக அரசு சந்தித்து வருகிறது.
அனுபவம் இல்லாத அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் பேச்சு, நடவடிக்கைகள் தவெக அரசுக்கு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நாளை தவெக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில், எம்எல்ஏக்கள் பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மீடியா சந்திப்பை தவிர்ப்பது போன்றவை குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிகிறது.
அதுமட்டுமின்றி, ஜூன் 22-ம் தேதி முதல்வர் விஜய் பிறந்தநாள் வர உள்ளது. அன்றைய தினம் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் இணைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட உள்ளது. அதே போன்று வரும் 18-ம் தேதி கூடவுள்ள சட்டசபை கூட்டத்தொடர் குறித்தும் எம்எல்ஏக்கள் எப்படி செயல்பட வேண்டும் என இந்த கூட்டத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?