குமுதம் விமர்சனக் குழு-அருள்வான்...!

மலைவாழ் மக்களின் வாழ்வியல், கல்வி மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்டு உருவான 'அருள்வான்' திரைப்படம், அருள்நிதி மற்றும் ஆரவின் நடிப்பால் மனதைத் தொடும் படைப்பாக அமைந்துள்ளது.

Jul 24, 2026 - 12:47
குமுதம் விமர்சனக் குழு-அருள்வான்...!
arulvaan

எழுத்தறிவித்தவன் இறைவன்.ஒரு கலெக்டர் எப்படி இறைவன் ஆகிறார் என்பதுதான் கதை. மிகச்சிறிய மலைவாழ் கிராம மக்கள் அன்றாட வாழ்க்கையில் படும் சிரமங்களை.. அரசு மற்றும் அதிகாரிகளால் அவர்கள் சந்திக்கும் துயரங்களை.. தங்கள் வாழ்விடங்களை, வாழ்வியலை அவர்கள் இழந்து நிற்பதை... மனதைத் தொடும்படி, பார்ப்பவர்களின் சிந்தனையைத் தூண்டும்படி அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயகன்.

நீண்ட நாட்களுக்குப் பின் சூழலுக்கும், பாத்திரங்களின் உணர்வுகளுக்கும் ஏற்ப இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். காடு, மலை, அருவி என கேமராவிற்குள் அடக்க முடியாததைக்கூட திரையில் பசுமையாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார். லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் லால்குடி இளையராஜாவின் கலை, அழகும் நுட்பமும் நிறைந்தது.

கலெக்டராக வரும் அருள்நிதி, அதிகாரம் அன்புள்ளம் கொண்டவர்களிடம் இருந்தால் எவ்வளவு மேன்மையாக இருக்கும் என்பதைத் தன் அற்புதமான நடிப்பால் உணரவைத்திருக்கிறார். மலைவாசி இளைஞனாக வரும் ஆரவ் நடிப்பிலும், கட்டுடல் தேகத்திலும் அடுத்த சூர்யா என்பதை நிரூபிக்கிறார். தன் கிராமத்துக்குப் பள்ளியை வரவழைத்து, படித்துக் கலெக்டராகும் சிறுமி கிருத்திகா தான் கதையின் நாயகி. நடிப்பிலும் நட்சத்திரம்! காளி வெங்கட் விடி.வி கணேஷ் கச்சிதம்.

அந்தக் காளான் சமாசாரம் படத்தோடு ஒட்டவில்லை. படித்தால் கலெக்டருக்கும், டாக்டருக்கும் தான் படிப்பேன் என்பது, படிப்பறிவில்லாதவர்களைப் பொது அறிவில்லாத முட்டாள்களாகச் சித்திரிப்பது, அதிகாரிகளை ரவுடிகளாகக் காட்டுவது போன்ற வழக்கமான மசாலாத்தனங்களைத் தவிர்த்திருக்கலாம்.
'அருள்வான்' இதயத்தைத் தொடுகிறான்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow