தமிழக சட்டமன்ற தேர்தல்: 9 மணி நிலவரப்படி 17.69 சதவிகிதம் வாக்குபதிவு
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. காலை 9 மணி நேர நிலவரப்படி தமிழகம் முழுவதும் 17.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க மாநிலம் முழுவதும் 1.4 லட்சம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சிமற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அடங்கும். இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 11 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி அனைத்து மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் அமைதியான முறையில் தேர்தல் நடத்தும் வகையில் துணை ராணுவ வீரர்களுடன் இணைந்து 1.4 லட்சம் போலீசார் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கும் எண்ணும் மையங்களில் அந்தந்த மாவட்ட காவல்துறை, மாநகர ஆணையர்களுடன் இணைந்து 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 14.84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நெல்லையில் 15.96 சதவீதமும், நாகை மாவட்டத்தில் 17.51 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 13.80 சதவீத வாக்குகள் பதிவானது. தற்போது 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 17.17% வாக்குகள் பதிவாகி உள்ளன. நெல்லை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 15.96% வாக்குகள் பதிவாகி உள்ளன.நாகை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 17.51% வாக்குகள் பதிவாகி உள்ளன.கடலூர் மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 14.84% வாக்குகள் பதிவாகி உள்ளன.
13 மாவட்டங்களில் 20 சதவிகிதம்
அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 20.38% பதிவாகி உள்ளது. இதே போன்று தொகுதியை பொறுத்தவரை காங்கேயம் 20.97%, பல்லடம் 21.21% பதிவாகி உள்ளது. 13 மாவட்டங்களில் 20 சதவிகிதம் வாக்கு பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
நாங்குநேரி ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி பெரும்பத்து வாக்குச்சாவடியில் இது வரை எந்த ஒரு வாக்கும் பதிவாகவில்லை. ஏற்கனவே தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு விடுத்து இருந்தனர். அந்த வாக்குச்சாவடியில் 471 ஆண்களும் 498 பெண்களும் வாக்காளர்களாக உள்ளனர்
What's Your Reaction?