திருப்பதி லட்டில் குளியலறைகளை சுத்தம் செய்யும் ரசாயனம்: சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டு
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குளியலறைகளை சுத்தம் செய்யும் ரசாயனம் இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் திருப்பதி கோயிலில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்ததாக இப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
கடந்த ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சியில், திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஏற்கனவே அவர் குற்றஞ்சாட்டி இருந்கதார். இதை தொடர்ந்து திருப்பதி லட்டில் கலப்படம் தொடர்பாக உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது.
15 மாதங்கள் சிபிஐ நடத்திய விசாரணையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என, சிறப்பு விசாரணை குழு தெரிவித்தது.ஆனால், நெய் கலப்பட விவகாரத்தில், 240 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கர்னுால் மாவட்டத்தின் கழுகுட்லா பகுதியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் :ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்., அரசு, திருப்பதி வெங்கடாஜலபதியின் புகழை கெடுக்கும் நோக்கில், குளியலறைகளை சுத்தம் செய்யும் ரசாயனங்கள் கலக்கப்பட்ட நெய்யை, லட்டு தயாரிக்க ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தினர்.
இதில், இரண்டு வகை உள்ளன.சில தாவர அடிப்படையிலானவை; அவை விலை உயர்ந்ததும் கூட. ஆனால், விலங்கு கொழுப்பால் தயாரிக்கப்பட்ட நெய்யின் விலை குறைவு. இதைப் பயன்படுத்தி நெய் தயாரிக்கப்பட்டதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் அறிக்கை அளித்துள்ளது.இவ்வாறு குற்றம்சாட்டி பேசினார்.
What's Your Reaction?

