சபரிமலையில் கட்டுகடங்காத ஐயப்ப பக்தர்கள் கூட்டம் : இதுவரை 25 லட்சம் பேர் சாமி தரிசனம்
சபரிமலையில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலையில் வழக்கமாக மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். இந்த நடை திறப்பின் போது பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அந்த வகையில், கடந்த ஆண்டு (2024-2025) சபரிமலை சீசனில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக, கோவில் நடை திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 22 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில், சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது.
உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.
இந்தநிலையில் பக்தர்களின் வருகை குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 8-ந்தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் மகர விளக்கு தரிசனத்துடன் சேர்த்து சுமார் 40 லட்சத்திற்கும் அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வாய்ப்புள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

