அன்புமணி மத்திய அமைச்சர் பதவிக்கு " நான் தான் ரெகமண்ட் செய்தேன்" : ரகசியம் உடைத்த ஜிகே மணி
அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தர ராமதாசு சம்மதிக்கவில்லை. நான் அன்புமணிக்கு ரெகமண்ட் செய்து வாங்கி கொடுத்தேன் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி; தமிழ்நாட்டில் பாமக வலிமையான கட்சி. தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக பாமகவை உருவாக்கியவர் ராமதாஸ். பாமகவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி சொல்லி மாளாது.
பாளையங்கோட்டை சிறைக்கு மட்டும்தான் மருத்துவர் ராமதாஸ் செல்லவில்லை, அனைத்து சிறைகளுக்கும் சென்றுள்ளார். பா.ம.க.வுக்கு ஒரு சோதனை என்றால் ராமதாஸால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?.அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ்.
அன்புமணியால் ராமதாஸ் இன்று கண்கலங்குகிறார். அன்புமணியால் ஏற்பட்டுள்ள வேதனை, சோதனைகளால் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார். அன்புமணியால்தான் ராமதாசுக்கு வேதனையும் சோதனையும் ஏற்பட்டுள்ளது. ராமதாஸ் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று அன்புமணி கூறுவது அநாகரிகமானது.
பாமக, ராமதாஸ், அன்புமணிக்காக நீண்ட நாள் உழைத்து வருகிறேன். அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதல் நினைக்கவில்லை, துரோகம் நினைக்கவில்லை. அன்புமணி எப்படி யாரால் அமைச்சரானார் என்று அவர் சொல்ல வேண்டும்.அன்புமணியை மத்திய அமைச்சராக்குவதற்கு ராமதாஸ் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.
அன்புமணியை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்று முதலில் சொன்னபோது ராமதாஸ் மிகவும் கோபப்பட்டார். அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுக்க ராமதாஸிடம் நான்தான் பேசினேன். அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்குமாறு கூறி ராமதாஸை நான்தான் சம்மதிக்க வைத்தேன்.
பாமகவுக்காக ராமதாஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சிறைக்கு சென்றனர். கட்சிக்காக ராமதாஸ் பலமுறை சிறைக்கு சென்றார்; அன்புமணி எத்தனை முறை சிறைக்கு சென்றார்? எந்த கெடுதலும் செய்யாத என்னை பார்த்து துரோகி என்று கூறுகிறார் அன்புமணி.
அன்புமணி மக்களை சந்திக்க மாட்டார்; நிர்வாகிகள் அன்புமணியை எளிதில் அணுக முடியவில்லை. அன்புமணி தம்பி படை, தங்கை படை என அமைத்து அவரை வளர்த்துவிட்டோம். இவ்வாறு அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை ஜிகே மணி தனது பேட்டியில் முன்வைத்துள்ளார்.
What's Your Reaction?

