நரிக்குறவ இன பெண் மீது சரமாரி தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் என்பதால் வீட்டின் வாசலில் அமர்ந்ததற்கு கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய அந்த நபரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Oct 3, 2024 - 20:11
நரிக்குறவ இன பெண் மீது சரமாரி தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

வீட்டு வாசலில் அமர்ந்து பானி பூரி சாப்பிட்ட நரிக்குறவ இன பெண் மீது ஒருவர் அரிசி மூட்டையை மேலே போட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னை அருகே போரூர் அடுத்த மதனந்தபுரம் மாதா நகர் மெயின்ரோடு பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில்  நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஊசி பாசி விற்கும் பெண்கள் கடையில் பானி பூரி வாங்கி அங்கு இருந்த ஒரு வீட்டின்  வாசலில் அமர்ந்து  சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அந்த பெண்களை தகாத வார்த்தையில் பேசி திட்டியதோடு ராதா என்ற  நரிக்குறவ பெண்ணின் மீது தான் எடுத்து வந்த அரிசி மூட்டையைய் மேலே போட்டுள்ளார்.
பின்னர் வீட்டினுள் சென்று கட்டை ஒன்றை எடுத்து வந்து சரமாரியாக அந்த பெண்ணின் தலையில் தாக்கினார். அதில் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அந்தப் பெண்ணுக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் எழுந்து உள்ள நிலையில், மாங்காடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் என்பதால் வீட்டின் வாசலில் அமர்ந்ததற்கு கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய அந்த நபரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow