”ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..” செந்தில்பாலாஜிக்கு செக் வைத்த நீதிமன்றம்

ஜாமினில் வெளியாகியுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட நிபந்தனைகள்

Sep 26, 2024 - 14:53
”ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..” செந்தில்பாலாஜிக்கு செக் வைத்த நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி (Senthi Balaji) போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது நான்கு வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் (Money Laundering Case) ஈடுபட்டதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.

பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்புக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின், ஜார்ஜ் மாசிஹ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. 

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், சென்னை அறிவாலயம், புழல் சிறை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

செந்தில்பாலாஜிக்கு போடப்பட்ட நிபந்தனைகள்...

1. ஜாமினுக்கு மேல்முறையீடு செய்பவர் ரூ.25,00,000 தொகையில் ஜாமின் பத்திரங்களை சமர்பிக்க வேண்டும்.

2. மேல்முறையீடு செய்பவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசு தரப்பு சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளவோ ​​அல்லது தொடர்பு கொள்ள ​​முயற்சிக்கவோ கூடாது. முயற்சித்ததாகக் கண்டறியப்பட்டால், வழங்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்படும்

3. மேல்முறையீடு செய்பவர் ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை சென்னையில் உள்ள அமலாக்க இயக்குனரகத்தின் துணை இயக்குநர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். மேலும் அவர் ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையன்றும் விசாரணை அதிகாரிகளுக்கு முன்பாக ஆஜராக வேண்டும்.

4. ஜாமினில் வெளியாவதற்கு முன், தனது பாஸ்போர்ட்டை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்

5. தேவைப்படும் போது நீதிமன்றங்கள் மற்றும் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி சரியான நேரத்தில் ஆஜராக வேண்டும்.

6. நீதிமன்றத்தில் ஆஜராகாமலோ அல்லது விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினாலோ, வழங்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow