ஏதே… எடப்பாடி பதவி விலகுறேனு சொன்னாரா? – ஐடி விங் ரிப்ளே..!

சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து கடந்த ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து, எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுகவின் ஒவ்வொரு மாவட்ட, பகுதி மற்றும் ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

Jul 20, 2026 - 17:45
ஏதே… எடப்பாடி பதவி விலகுறேனு சொன்னாரா? – ஐடி விங் ரிப்ளே..!

திருவள்ளூர், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், இடையில் சில நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில், இன்று (ஜூலை 20) முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அந்தவகையில், இன்றைய கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, தேர்தலில் தோல்வி அடைந்ததால் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுமாறு மதுரை பகுதி செயலாளர் கந்தன் கூறியதாகவும், அதற்கு கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, ”நான் ஏன் பதவி விலக வேண்டும்? 47 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைத்துள்ளேன்” என்று கூறியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

இது எந்தளவிற்கு உண்மை என்ற குழப்பம் அரசியல் வட்டாரத்தில் எழுந்த நிலையில், இதுகுறித்து அதிமுக ஐடி விங் விளக்கம் அளித்துள்ளது. 

இதுதொடர்பாக, எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக, ”மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் மாவட்டக் கழக வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் நிலையில், கூட்டத்திற்குள் பேசியதாக தொடர்ந்து தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வருவதை ஏற்கனவே மறுத்து, இத்தகைய செய்திகளை வெளியிடும் முன் எங்களிடம் உண்மையைக் கேட்டறிந்து வெளியிடுமாறு வலியுறுத்தி இருந்தோம்.

இந்நிலையில், இன்றைய தினம், மீண்டும் ஒரு முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்றை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத்தில் கந்தன் என்ற பெயரில் எந்தப் பகுதிச் செயலாளரும் இல்லை. எனவே, இந்த பொய் செய்தியை திட்டவட்டமாக மறுப்பதுடன், ஊடகங்கள் அறம் தவறாமல் செய்திகளை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

தொடர்ந்து இதுபோன்று பொய் செய்திகள் வெளியிட்டால் கழகத்தின் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது. 

அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டத்தில் நாளை(ஜூலை 21) தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், 22 ஆம் தேதி திருப்பூர், நாமக்கல், வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் 23 ஆம் தேதி கோவை, திண்டுக்கல், வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் 24 ஆம் தேதி விழுப்புரம், திருவாரூர், சேலம் மாவட்ட நிர்வாகிகளும், 25-ஆம் தேதி கள்ளக்குறிச்சி, சென்னை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow