உதயநிதியை சந்திக்கும் செந்தில்பாலாஜி? அமைச்சர் ஆவது குறித்து ஆலோசனையா? 

ஜாமினில் வெளியே வந்துள்ள செந்தில்பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் துரைமுருகன் ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sep 27, 2024 - 10:40
உதயநிதியை சந்திக்கும் செந்தில்பாலாஜி? அமைச்சர் ஆவது குறித்து ஆலோசனையா? 

கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் செந்தில்பாலாஜி மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்ட மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு   காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில்பாலாஜி, ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது. பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்புக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின், ஜார்ஜ் மாசிஹ் தலைமையிலான அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினில், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, 471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த செந்தில் பாலாஜி வெளியே வந்தார். தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர். பிறகு புழல் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது தொடரப்பட்ட பொய் வழக்கில், சட்ட ரீதியாக சந்தித்து நிச்சயம் வெளிவருவேன். முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்நாள் நன்றி” எனத் தெரிவித்தார்.

ஜாமினில் வெளியான செந்தில்பாலாஜி அமைச்சராக பதவி வகிப்பதில் எந்த சிக்கலும் இல்லை எனபதால், அவர் மீண்டும் மின்சாரத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும், அமைச்சராக செப்.30 ஆம் தேதி அவர் பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில், இன்று செந்தில் பாலாஜி Ed அலுவலகத்தில் கையெழுத்து இடுகிறார். அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் துரைமுருகன் ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் அமைச்சராவது குறித்து ஆலோசனை செய்ய இந்த சந்திப்பு நடக்க உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow