கர்நாடக மாநிலத்தில் லாரி ஸ்ட்ரைக்: காய்கறி விலை உயரும் அபாயம்!
டீசல் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டணம் அதிகரிப்பை கண்டித்து கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு லாரி போக்குவரத்தில் தடை ஏற்பட்டு காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களுக்கு ஆடைகள், வெல்லம், ஜவ்வரிசி, மஞ்சள், முட்டை உள்ளிட்ட பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதேப்போல வடமாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக தமிழ்நாட்டுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மக்காசோளம், பருப்பு, பூண்டு,வெங்காயம், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. லாரி வேலை நிறுத்ததால் இந்த பொருள்களின் வரத்து பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
அதே போல கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு கேரட், தக்காளி, முட்டைக்கோஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் பழங்களும் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. வேலை நிறுத்தத்தால் காய்கறிகள் வரத்து மற்றும் பழங்களின் வரத்து குறைந்து அதன் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் போராட்டம் துவங்கியுள்ளதால் தமிழகத்தில் இருந்து பெரும்பாலான லாரிகள் வடமாநிலங்களுக்கு செல்லவில்லை. இதனால் ஓசூர், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரிகளின் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. போராட்டத்தால் மாநில எல்லை பகுதியில் சரக்கு லாரிகள், ஜல்லி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
கர்நாடக மாநிலத்தில் சுமார் ஆறு லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தினால் இயங்கவில்லை.மற்ற மாநிலங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் கர்நாடகாவிற்குள் வந்து செல்கின்றன என கர்நாடகா லாரி அசோசியேஷன் செயலாளர் கூறியுள்ளார்.
What's Your Reaction?






