மிசா விவகாரம்.. ஸ்டாலினுக்கு தவெக ஐடி விங் பதிலடி! முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறதா தவெக?
சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் செய்த சைகை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் திமுக மற்றும் தவெக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.
சட்டப்பேரவையில் தாடையில் கைவைத்து முதலமைச்சர் விஜய் செய்த சைகைக்கு திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதையடுத்து, அந்த சைகை எதேச்சையாக நடந்தது என்றும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவை சம்பவங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு முதலமைச்சர் விஜய்க்குப் பதிலடி கொடுத்தார்.
அந்த வீடியோவில், 1976-ம் ஆண்டு அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்ட சம்பவங்களை மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். சிறையில் தன்னை உள்ளிட்ட பலர் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்தும் அவர் விவரித்தார். தனக்கு ஏற்பட்ட தாக்குதலில்தான் தாடை எலும்பு உடைந்ததாகவும், அதற்கான தழும்பு இன்றளவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சட்டமன்ற நூலகத்தில் உள்ள ஆவணங்களைப் படித்து திமுகவின் போராட்ட வரலாற்றை தெரிந்துகொள்ளுமாறு முதலமைச்சர் விஜய்க்கு அறிவுறுத்தினார்.
‘முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் விஜய் தன்னை நேரில் சந்தித்த நிகழ்வையும் மு.க.ஸ்டாலின் தனது வீடியோவில் குறிப்பிட்டார். அப்போது பிரச்சாரத்தின்போது தன்னை விமர்சித்துப் பேசியதற்காக விஜய் வருத்தம் தெரிவித்ததாகவும், அதற்கு தான் ‘பரவாயில்லை பிரதர்’ எனக் கூறியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தற்போது அந்த நிகழ்வை விஜய் மறந்துவிட்டது போலத் தெரிகிறது என்றும், முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்துடன் அவரது வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மேலும், சர்காரியா கமிஷன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தவறான தகவல்களைப் பேசியதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். அதேபோல், அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் அவர் கேள்விகளை எழுப்பினார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சி 15 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக அவர் சாடினார். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது தகுதியுள்ளவர்களுக்கு 3 சிலிண்டர்கள் என மாற்றியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதேபோல், மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் எனக் கூறிவிட்டு தற்போது ரூ.1,000 மட்டுமே வழங்கப்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அரசு வாய் திறக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
சட்டமன்றத்தின் மாண்பைக் காக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். விதவிதமான ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே வீணாக்கி வருவதாகவும், சட்டமன்றத்தை ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றிவிட்டு திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களில் நின்று போட்டோஷூட் செய்வதாகவும் அவர் முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்தார்.
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றாலும், மக்களுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என திமுக தொண்டர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் வீடியோ பதிவுக்கு தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட ‘சிறை சென்ற தியாகி’ என்ற பிம்பம் உடைந்துவிட்டதால் ஸ்டாலின் பதற்றமடைந்துள்ளதாக விமர்சித்துள்ளது.
மேலும், ‘detention copy’ குறித்து ஸ்டாலின் தனது நீண்ட வீடியோவில் எதுவும் பேசவில்லை என்றும் தவெக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.
“உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே shooting video வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது” எனவும் அந்தப் பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல ‘cut’-கள், உணர்வற்ற பேச்சு என ஸ்டாலினின் வீடியோவை விமர்சித்துள்ள தவெக ஐடி விங், மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை மக்களை நம்ப வைக்க முயற்சிக்கும் தோல்வியடைந்த முயற்சி எனக் குறிப்பிட்டுள்ளது.
“கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் காணொளி” எனவும் தவெக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதனால், முதலமைச்சர் விஜய் தனது சைகையில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளித்துள்ள நிலையில், அவரது கட்சியின் ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவு அதற்கு முரணாக இருப்பதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மிசா விவகாரம் தொடர்பான சர்ச்சை தற்போது திமுக - தவெக இடையேயான அரசியல் மோதலாக மேலும் தீவிரமடைந்துள்ளது.
What's Your Reaction?