இயக்குநர்கள் ஹீரோவாக மாறுவதுதான் இப்போது ட்ரெண்ட்- இயக்குநர் பேரரசு!
”த்ரில்லர் படத்தில் அந்த த்ரில் உணர்வை பார்வையாளர்களுக்குக் கடத்துவது சாதாரண விஷயம் இல்லை. அது 'குற்றம் புதிது' படத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன்” என இயக்குநர் பேரரசு ‘குற்றம் புதிது’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'குற்றம் புதிது' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில், தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சேஷ்விதா கனிமொழி நடித்துள்ளார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான தருண் விஜய் பேசுகையில், ”சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். என் அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் கதாநாயகனாகியிருக்க முடியாது. அவர்களுக்கு நன்றி. இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தைக் கொடுத்துள்ளார். பொறுமையாகத் தொடங்கும் படம், போகப்போக பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும். நான் கதிரேசன் என்ற உணவு டெலிவரி செய்யும் பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள். கண்டிப்பாக ஊடகங்களும் பார்வையாளர்களும் எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்," எனப் பேசினார்.
த்ரில்லர் படங்கள் சாதாரண விஷயமில்லை:
விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த இயக்குநர் பேரரசு பேசுகையில், "வழக்கமாக ஒரு தந்தை தன் மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும்போது, வண்ணமயமான உடைகள், அறிமுகப் பாடல் என்றுதான் அழகு பார்ப்பார். ஆனால், இப்படி ஒரு வித்தியாசமான கதையை கார்த்திகேயன் தேர்ந்தெடுத்திருக்கிறார். த்ரில்லர் படத்தில் அந்த த்ரில் உணர்வை பார்வையாளர்களுக்குக் கடத்துவது சாதாரண விஷயம் இல்லை. அது 'குற்றம் புதிது' படத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இயக்குநர்கள் கதாநாயகர்களாக மாறுவதுதான் இப்போது ட்ரெண்ட். எனவே, இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் இரண்டு ஹிட் படங்களை இயக்கிய பிறகு, கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடித்துவிடுங்கள். விமர்சனங்களை நம்பாமல், மக்கள் நீங்கள் எல்லா படங்களையும் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்," என்றார்.
படம் நன்றாக வந்திருக்கிறது: இயக்குநர் நம்பிக்கை
படத்தின் இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் பேசுகையில், "கதை சொல்லப் போன முதல் நாளில் இருந்து, இப்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை, அதற்குக் கார்த்திகேயன் சார்தான் முதல் காரணம். தருணுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது. அவர் கோபமடையும் காட்சிகளுக்காக கடுமையான பயிற்சி எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாரும் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
அதேபோல், தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறது. இது த்ரில்லர் படமாக இருந்தாலும் நிறைய உணர்வுபூர்வமான காட்சிகள் உள்ளன. படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது 'நன்றாக இருக்கிறது' என்று நீங்கள் உணர்வீர்கள். என் அண்ணன், அண்ணி, என் மனைவி எல்லோருக்கும் நன்றி," என நெகிழ்ந்தார்.
What's Your Reaction?






