போராட்டங்களுக்கு அடிபணிந்த அரசு! மீண்டும் பால் கொள்முதல் விலை உயர்வு!

சட்டசபையில் அதிரடி அறிவிப்புகள்... பால் விலை முதல் மின் திட்டங்கள் வரை முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

Aug 31, 2026 - 12:07
போராட்டங்களுக்கு அடிபணிந்த அரசு! மீண்டும் பால் கொள்முதல் விலை உயர்வு!
CM Vijay Announces Big Schemes in Assembly

தமிழ்நாடு சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பால் உற்பத்தியாளர்கள் நலன், மின் உற்பத்தி, தொழில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான அறிவிப்புகள் இதில் இடம்பெற்றன.

பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு :

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

ஏற்கெனவே ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக அதிகரிக்கிறது.

பால் கொள்முதல் விலை உயர்வால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் :

தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தூத்துக்குடியில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

தூத்துக்குடியில் தனியார் பங்களிப்புடன் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் 1,600 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், தூத்துக்குடியில் புதிதாக 2 புதிய அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் புதிய துணை மின் நிலையங்கள் :

தமிழ்நாட்டின் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

மக்களின் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யவும், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

காஞ்சிபுரத்தில் செமிகண்டக்டர் நிறுவனம் :

தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் சிப்காட் மூலம் செமிகண்டக்டர் நிறுவனம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

இந்த திட்டம் ரூ.175 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கோவையில் டிஜிட்டல் நிதி மையம் :

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கோவையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, மின் உற்பத்தி மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow