நீர்வரத்து அதிகரிப்பு: 46 அடியை எட்டிய வீராணம் ஏரி

வீராணம் ஏரி 46 அடியை எட்டியது.ஏரியில் இருந்து சென்னைக்கு 59 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

Nov 22, 2023 - 11:22
Nov 22, 2023 - 13:58
நீர்வரத்து அதிகரிப்பு: 46 அடியை எட்டிய வீராணம் ஏரி

நீர்வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரி 46 அடியை எட்டியுள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.டெல்டா பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது.கடலூர் மாவட்டத்தின் மிகப் பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.

இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து அணைக்கரையில கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணைக்கு வரும்.கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

மழைக்காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும்.

இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டது.இதனால் ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.

தற்போது கடலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.மேலும் வீராணம் ஏரிக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது.வினாடிக்கு 59 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இதனால் வீராணம் ஏரி 46 அடியை எட்டியது.ஏரியில் இருந்து சென்னைக்கு 59 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

வீராணம் ஏரி நிரம்பி வருவதால் ஏரியில் இருந்து பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow