குளத்திலேயே வாழும் சிறுவன்... புது வாழ்வு அளிக்கும் ஆனந்த்அம்பானி..!
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இக்பால் என்ற சிறுவன், மர்மமான உடல்நலப் பிரச்சினையால் பெரும்பாலான நேரத்தை குளங்களிலேயே கழித்து வந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானியின் தலையீட்டின் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த இக்பால், குளத்தில் இருந்து வெளியே வந்தவுடன் உடல் முழுவதும் கடுமையான எரிச்சல் ஏற்படுவதாகக் குடும்பத்தினரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பகல் மற்றும் இரவு என நீண்ட நேரம் குளத்திலேயே இருந்து வந்துள்ளார். சில நேரங்களில் ஒரு குளத்தில் இருந்து மற்றொரு நீர்நிலைக்கும் சென்று நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததாக கூறப்படுகிறது.
இக்பால் குளத்தில் அமர்ந்தபடியே சிற்றுண்டி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவரது நிலைமை பரவலாக கவனம் பெற்றது. மேலும், தனக்குள் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் தலையீட்டுக்குப் பிறகு இக்பாலை மேற்கு வங்காளத்தில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தற்போது அவர் மும்பையில் உள்ள சர் ஹெச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இக்பாலின் பெற்றோர், ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவரது நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும், நீண்டகால சிகிச்சைக்கான செலவை தங்களால் சமாளிக்க முடியாததால் உதவி கோரியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து நீரில் இருப்பதால் தோல் மென்மையாகி, எரிச்சல், வெடிப்பு மற்றும் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்பாலின் உடல்நலப் பிரச்சினைக்கான காரணத்தை கண்டறிய மும்பை மருத்துவர்கள் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?