பிரதமர் வேட்பாளராக அகிலேஷ் யாதவை குறிவைக்கும் பாஜக? காங்., கழட்டிவிடுமா சமாஜ்வாடி கட்சி?

2029 தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கூட்டணியைத் தவிர்த்து அகிலேஷ் யாதவை மையமாகக் கொண்ட புதிய அரசியல் அணியை உருவாக்க பாஜக திட்டமிட்டு வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Sep 1, 2026 - 11:45
பிரதமர் வேட்பாளராக அகிலேஷ் யாதவை குறிவைக்கும் பாஜக? காங்., கழட்டிவிடுமா சமாஜ்வாடி கட்சி?

2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருந்தாலும், அடுத்த பிரதமர் யார் என்ற அரசியல் விவாதம் இப்போதே தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மாநிலக் கட்சிகளை மையமாக வைத்து புதிய அரசியல் கணக்குகளை பாஜக போட்டு வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை எதிர்கால பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் வகையில் பாஜக தரப்பு அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

2029 தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல், தனித்த அரசியல் பாதையில் அகிலேஷ் யாதவ் களமிறங்க வேண்டும் என்றும், மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் பாஜக தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டால், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைவதைத் தடுக்கும் வகையில், மாநிலக் கட்சிகளை ஆதரித்து ஆட்சி அமைக்கும் அரசியல் திட்டமும் பாஜகவிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், மாநிலக் கட்சித் தலைவர்களில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்றும், அதற்கான முக்கிய முகமாக அகிலேஷ் யாதவின் பெயர் பேசப்பட்டு வருவதாகவும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த தகவல்கள் குறித்து பாஜக அல்லது சமாஜ்வாதி கட்சி தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. 2029 தேர்தலை நோக்கிய அரசியல் களத்தில் அகிலேஷ் யாதவை மையமாக வைத்து புதிய கூட்டணி கணக்குகள் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow