“நாளைக்கு கண்டிப்பா சொல்லு வீங்கா தானா”: தேமுதிக யாருடன் கூட்டணி நாளை அறிவிக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்
2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பதை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக- பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதி கொடுக்க முடியும் என அதிமுக தரப்பில் சொல்லப்பட்டது. இதனால் திமுக தரப்பிலும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுகவில் 8 தொகுதிகள் வரை தர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என திமுகவிடம் தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனிடையே தேமுதிக கூட்டணி குறித்து முடிவெடுத்து விட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவரது இந்த ரத யாத்திரை நேற்றைய தினம் கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வந்தது.
அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது. 2026-ல் நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். கூட்டணி குறித்து சென்னையில் பிப்ரவரி 3-ந் தேதி (நாளை) அறிவிப்பேன். என பேசினார்.
ஏற்கனவே கடலூர் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பேன் என பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்தார். ஆனால் அந்த மாநாட்டில் கூட்டணியை அவர் அறிவிக்கவில்லை. கடந்த சில நாட்களாக பிப்ரவரி 3-ம் தேதி கூட்டணி அறிவிப்பை வெளியிடுவேன் என பிரேமலதா தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். அதன்படி நாளையாவது கூட்டணியை அறிவிப்பாரா என தேமுதிகவினர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
What's Your Reaction?

