“மதுப்பிரியர்களுக்கு ரெட் அலார்ட்” குவாட்டர், ஆப், புல் என இனி இஷ்டத்துக்கு வாங்க முடியாது: தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி
சட்டமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் விற்பனை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இனி ஒருவர் மட்டும் தனது இஷ்டத்துக்கு தேவையான மதுப்பாட்டில்களை வாங்க முடியாது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்து வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனைக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில், உள்நாட்டு, வெளிநாட்டு மது வகைகள் குவாட்டர் (180 மி.லி.), ஆப் (750 மி.லி.), புல் (750 மி.லி.) பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், பீர், ஒயினும் விற்கப்படுகின்றன. இந்த நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு மது வகைகளை விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மேலாளர்கள், பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- மது விற்பனை, முழு கணினிமயமாக்க திட்டம் வழியே தலைமை அலுவலகத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு ரசீதில், 4.50 லிட்டர் இந்தியாவில் உற்பத்தியாகும் மது வகைகள், 7.80 லிட்டர் பீர், 4.50 லிட்டர் வெளிநாட்டு மது வகைகள், 9 லிட்டர் ஒயின் ஆகியவற்றுக்கு மேல் கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது.
இதை பணியாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவருக்கு ஒரு ரசீதில் 25 குவாட்டர் அல்லது 12 ஆப் அல்லது 6 புல் பாட்டில் மது வகைகளையும், 12 பீர் பாட்டில்களையும் வழங்க முடியும். இதற்கு மேல் வழங்கினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
What's Your Reaction?

