செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் 900 குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்ப்பு

 நடவடிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்ற பிரிவுக்கு உத்தரவு

Jan 4, 2024 - 13:15
Jan 4, 2024 - 14:07
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் 900 குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்ப்பு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜி எதிராக பதியப்பட்ட வழக்கில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என 900க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன்,  அன்னராஜ் உள்ளிட்ட மீது  சென்னை  மத்திய  குற்றப்பிரிவு  காவல்துறையினர் 2017 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை  மத்திய குற்றப்பிரிவு காவல் துறை, கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிகாரிகள், ஊழியர்கள் என சுமார் 900 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன் நேற்று(ஜனவரி 03)மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது காவல்துறை தரப்பில்,  வழக்கை நடத்துவதற்கான அனுமதியை தமிழக அரசிடம் பெறும் நடைமுறை கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்ட சில போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில், தங்களை தேவையின்றி தங்களை வழக்கில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, கூடுதல் குற்றபத்திரிக்கையில் 900 பேர் வரை சேர்த்துள்ளதால், அனுமதி கிடைத்த பின் தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்க முடியும் என தெரிவித்துடன், முதல் குற்றம்சாட்டப்பட்ட நபராக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை நடத்துவதற்கான அனுமதி பெறுவதற்கான  நடவடிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்ற பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜெயவேல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow