இடிந்து விழுந்த தூண்.. சென்னையில் பலியான வடமாநில தொழிலாளி.. கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்கு

சென்னை அமைந்தகரை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தூண் இடிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

May 15, 2024 - 18:17
இடிந்து விழுந்த தூண்.. சென்னையில் பலியான வடமாநில தொழிலாளி.. கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்கு

அமைந்தகரை அய்யாவு காலனி பாலவிநாயகம் தெருவில் செல்வக்குமார் என்பவர் சொந்தமாக கட்டிடம் கட்டி வருகிறார். இவர் எஸ்சிவி கன்ஸட்ரக்சன் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அமைந்தகரையில் நடந்து வரும் கட்டுமான பணியில் வடமாநில தொழிலாளர்கள் இன்று காலை வேலை செய்து வந்தபோது இரண்டாவது தளத்தில் இருவர் பணி செய்து கொண்டிருந்தனர். 
அப்போது  எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் தூண் இடிந்து தொழிலாளிகள் இருவர் மீதும் விழுந்தது. இதில் தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயத்துடன் உயிருக்கு போராடிய மற்றொரு தொழிலாளி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து அமைந்தகரை போலீசார், இறந்து போன கட்டிட தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்து போனவர் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த நவ்சத் சேக் என்பதும், காயமடைந்த மற்றொரு தொழிலாளியும் அதே மாநிலத்தைச் சேர்ந்த குஸ்முதீன் என்பதும் தெரிய வந்தது.

மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த கட்டிடம் கட்டும் பணி நடந்து வருவதாகவும், சாரம் கட்டுவதற்காக துளையிட்ட போது தூண் சரிந்து நவ்சத் சேக் மீது விழுந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வக்குமார் மீது காயம் ஏற்படுத்துதல், அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow